Sunday, November 4, 2007

தீர்வு 1: இட ஒதுக்கீட்டுக்கு :

தீர்வு 1: இட ஒதுக்கீட்டுக்கு :

சுதந்திரம் கிடைத்து அறுபது ஆண்டுகள் ஆகியும் இன்னும் அனைவரும் சமம் எனவும் எல்லாரும் எல்லா இடங்களிலும் முழுமையாக இருக்கிறார்கள் என்றும் சொல்ல முடியவில்லை। இத்தனைக்கும் மத்தி முதல் மாநிலம் வரை எல்லா இடங்களிலும் சட்ட வடிவில் இட ஒதுக்கீடு அமுலாக்கப்பட்டு உள்ளது

தற்போது உச்ச நீதி மன்றம் ஆட்சியாளர்களைப் பார்த்து இட ஒதுக்கீடு இன்னும் எத்தனை ஆண்டு வழங்கப்படும்? அது குறித்த சரியான புள்ளி விவரம் என்ன? என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது। எத்தனையோ வருடங்களுக்கு முன் எடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பும் பிற்பாடு சின்னச்சின்ன அளவீடாலான குத்துமதிப்பான கணக்குகளும் நீதி மன்றத்தில் சமர்ப்பிக்க முடியாதல்லவா? எனவே இதற்கு உடனடியாக பதில் கூற முடியாது எனவும் அவகாசம் வேண்டும் எனவும் மத்திய அரசு பதில் கூறி இவ்விஷயத்தை தற்காலிகமாக ஆறப் போட்டுள்ளது।

ஆனால் இதற்கு நிரந்தர தீர்வு என்ன? ஏன் இத்தனை காலமாக மக்கள் சமம் அடையவில்லை? ஒருவேளை இந்த திட்டமே கோளாறோ? அல்லது அமுல்படுத்தியது சரியில்லையோ? என்ற கேள்விகள் சாதாரண மக்களுக்கு எழுகின்றன.

ஓட்டு அரசியலிலேயே ஒண்டு குடித்தனம் நடத்துவதால் அரசியல் கட்சிகளுக்கு இதில் நேரடியாக பதில் கூற முடியாது முடிந்த வரை ஜவ்வு மாதிரி இழுக்கத்தான் முடியும்। இந்த ஆட்சி ஆனாலும் சரி வேறு ஆட்சி ஆனாலும் சரி யாராயினும் இதே கதைதான் நீடிக்கும். கோர்ட் எத்தனை முறை கேட்டாலும் மௌனம் மட்டுமே பதிலாய் வரும்.

நமக்குத்தான் ஓட்டு பயம் இல்லையே. நாமாவது இது பற்றி நியாயமாகவும் நடுநிலையாகவும் சிந்திப்போம். இத்தனை நாள் நடந்தது கண்டிப்பாக ஒரு தெளிவான தொலை நோக்குடன் செயல்படவில்லை என்பதும் ஆனால் அதே சமயம் தமிழ் நாடு போன்ற மாநிலங்களில் சமூக நீதி நிலை பெற்றதற்கு இதுவே முழு காரணம் என்பதும் மறுக்க முடியாத உண்மைகள்.

முதலில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆகியோருக்காக இருந்தது மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் என்றெல்லாம் கிளை போல் பரவி, சாதி அடிப்படையிலான முழு பிரிவினை ஆகிவிட்டது.

மக்கள் மனமும் தங்களுக்கு ஏதானும் சலுகைகள் கிடைக்குமென்றால் தங்களை இன்னும் கீழான பட்டியலில் சேர்த்தாலும் கவலை இல்லை என்ற எண்ணத்தில் ஊறி அதற்காக அவ்வப்போது போராடவும் துணிந்து விட்டார்கள்.

இன்றைக்கு நகரங்களில் பெரும்பாலும் அறிவிக்கப்படாத சமத்துவபுரங்களான பகுதிகளே இருப்பதால் இவ்விடங்களில் சாதி அடிப்படையிலான ஒதுக்கீடு என்பதே ஒரு கேலிகூத்துதான்.

ஏற்கனவே இட ஒதுக்கீட்டின் மூலம் பயன் பெற்றவர்களோ அல்லது அவர்களின் குடும்பத்தாரோ மீண்டும் மீண்டும் பயன் அடைகிறார்களே அன்றி உண்மையாக பயன் பெற வேண்டியவர்கள் அடி மட்டத்திலேயே இருக்கிறார்கள். இன்னும் பல கிராமங்களில் தாழ்த்தப்பட்டவர்கள் இரட்டை குவளை முறையாலும் மற்றும் பல சமூக அவலங்களாலும் பாதிக்கப்பட்டே இருக்கிறார்கள். ஓரளவு தலித் அமைப்புக்கள் பலமாக உள்ள இடங்களிலும் அல்லது வலிமையான ஆட்களாக இருப்பவர்களும் மட்டுமே இந்த கொடுமைகளில் இருந்து தப்ப முடிகிறது.

சட்டங்கள் போட்டும் இதை மாற்ற முடியவில்லை. அப்படியாயின் இதற்கு தீர்வு தான் என்ன? உண்மையான கல்வியும் பதவிகளும் அவர்களுக்கோ அல்லது அவர்களை சார்ந்தவர்களுக்கோ இன்னும் கிடைக்கவில்லை என்பது தானே? இதற்கு முன்னரே இட ஒதுக்கீடு மூலம் பயனடைந்தவர்களே மீண்டும் மீண்டும் அனுபவிப்பதால் அங்கும் கீழ் மட்டத்தில் இருப்பவர்கள் மேலும் கீழாகிறார்கள்.

அரசாங்கங்களுக்கோ இதில் ஒரு தைரியமான தெளிவான முடிவை எடுக்க பயமாக உள்ளது. எங்கே தொட்டால் எங்கே வெடிக்குமோ என்று. எந்த அரசாங்கம் இதில் கையை வைத்தாலும் எதிர் கட்சிகள் ருத்ர தாண்டவம் ஆடத்தான் செய்யும். அதற்காக அப்படியே விட்டு விட முடியுமா. இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் அல்லது எத்தனை தலைமுறைகளுக்குத்தன் ஏழைகளும் ஒதுக்கப்பட்டவர்களும் இட ஒதுக்கீட்டை நம்பி வாழ வேண்டும்? அவர்களுக்கு தன்னம்பிக்கையும் போட்டி போடும் குணமும் வளர வேண்டாமா? நான் இப்படி இருந்தாலே போதும், எனக்கு கோட்டா இருக்கு என்று வளரும் பருவத்திலேயே அவனது திறமையை நசுக்கும் முயற்சி அல்லவா இது? ஒரு குறிப்பிட்ட கால வரையை நிர்மாணிக்க முடியவில்லை என்றால் அரசுகள் எதற்கு? கட்சிகள் எதற்கு? ஒரு வேளை இந்த பிரச்சினை முடிந்து விட்டால் நாம் வேறு எதை வைத்து கட்சி வளர்ப்பது அல்லது வயிறு வளர்ப்பது என்று நினைக்கிறார்களோ? சரி அவர்கள் எப்படியாவது போய்த் தொலையட்டும். நாமாவது ஒரு முடிவை முன் வைப்போம்.

இது நடக்குமா என்பது தெரியாது. ஆனால் நாம் நமக்குள்ளே யோசிப்போம்.முதலில் இன்றைக்கு உள்ள ஒதுக்கீடுகள் என்னென்ன? பி.சி., எம்.பி.சி, எஸ்.சி., மற்றும் எஸ்.டி. சில மாநிலங்களில் முதல் இரண்டு பிரிவும் சேர்த்து ஒ.பி.சி. என்று உள்ளது. முற்பட்ட வகுப்பினர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு என்று எதுவும் கிடையாது.

இந்தியா போன்ற மாபெரும் மக்கள் தொகை நாட்டில் நம்மிடம் இருக்கும் பள்ளி, கல்லூரிகள் மிகவும் குறைவு. இந்த விகிதாசாரத்தை அதிகரிக்க பல்வேறு திட்டங்கள் போடப்பட்டும் அவை முழு பலனைத் தரவில்லை. அவற்றின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு தரத்தையும் மேம்படுத்தினால் மட்டுமே எதிர்காலத்தில் நல்ல பலனைப் பெற முடியும்.

சரி இட ஒதுக்கீடுக்கு வருவோம். இன்றைக்கு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு சேரும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் அனைவருக்கும் அவர்கள் பட்டப் படிப்பு முடிக்கும் வரை இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று அரசு அறிவிக்கட்டும். அதாவது சுமார் பதினைந்து ஆண்டுகள். அந்த காலகட்டத்தில் அவர்களுக்கு பள்ளிப் படிப்போடு பல விதமான திறமைகளையும் பல்வேறு மொழி ஆர்வத்தையும் உயர்ந்த அறிவியல் மற்றும் கணினி பயிற்சியையும் தகுந்த ஆசிரியர்களையும் சமூக ஆர்வலர்களையும் கொண்டு பயிற்றுவிக்கட்டும்.

அதே போல இன்றைக்கு ஆறாம் வகுப்பு சேரும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிள்ளைகளுக்கு இட ஒதுக்கீடு தொடரட்டும். அவர்கள் பட்டபடிப்பு முடிக்கும் வரை அதாவது சுமார் ஒன்பது ஆண்டுகள்.

மேலும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இன்றைக்கு ஒன்பதாம் வகுப்பு படிப்பவர்கள் முதல் இட ஒதுக்கீடு வழங்கப்படட்டும். அதாவது சுமார் ஏழு ஆண்டுகள்.

அதன் பிறகு அனைவருக்கும் சில பொருளாதார அல்லது ஏற்கனவே அனுபவித்திருத்தல் போன்ற கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்து உண்மையான சமத்துவத்தை சரித்திரத்தில் இடம் பெறச்செய்யலாம்.

இன்றைய சூழ்நிலையில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள தகுதி வாய்ந்த முற்பட்ட வகுப்பினருக்கும் பிற்படுத்தப்பட்டோருக்கு கொடுக்கும் கால அளவீட்டில் ஒதுக்கீடு வழங்கலாம்।

மேலும் இட ஒதுக்கீடுகளுக்குள் அந்தந்தப் பிரிவுகளில் பொருளாதார ரீதியிலும் ஏற்கனவே ஒதுக்கீடை அனுபவிக்காத பின்தங்கிய நிலையிலும் இருப்பவர்களுக்கு ஓர் உள் ஒதுக்கீடு ஏற்படுத்தி அவர்களுக்கு முதல் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

சிலர் சொல்வது போல் உடனடியாக இட ஒதுக்கீட்டு முறையை கபளீகரம் செய்வதும் நாம் இவ்வளவு நாள் செய்து வந்த சமூக நீதிக்கு பாதகம் ஆகிவிடும். ஆனால் இன்றைக்கு பெரும்பாலான கட்டமைப்புகளும் அரசாங்கத்திடம் பண வசதியும் உதவி செய்ய பலரும் இருக்கும் போது இந்த கால அளவே அதிகம் தான்.

கல்வி என்பதை கட்சிகளுக்கு அப்பாற்பட்ட, ஜாதிகளுக்கு அப்பாற்பட்ட, வாக்கு வங்கிக்கு அப்பாற்பட்ட விஷயமாக்கி, எந்த அரசாங்கம் வந்தாலும் இது சத்துணவு போல் செயல்படுத்தப்படும் என்ற ஒரு வெறியுடன் ஈடுபட வேண்டும்.

தங்கள் பிள்ளையை ஒன்றாம் வகுப்பு சேர்க்கும் போதே அவனை எப்படி ஆக்க வேண்டும் என்று ஒவ்வொரு பெற்றோரும் விரும்பி முடிவு எடுக்கிறார்கள். ஒரு சாதாரண நடுத்தர வகுப்பைச் சேர்ந்த தந்தைக்கே தன் பிள்ளையை எப்படியும் பொறியாளராக ஆக்கி விடுவேன் என்ற நம்பிக்கை துளிர் விடும்போது ஓர் அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட கால வரைக்குள் இத்திட்டத்தை செயல் படுத்த முடியாதா என்ன?

சிந்திப்பீர்களா தலைவர்களே?

அன்புடன்,

ஈ. ரா.

Friday, November 2, 2007

ரஜினி அதிசயம் - திரு.வி.கே.இராமசாமி

அன்பு நண்பர்களுக்கு,

நான் மறைந்த நடிகர் திரு.வி.கே.ராமசாமி அவர்கள் எழுதிய "எனது கலைப் பயணம்" என்ற நூலை சில நாட்களுக்கு முன் படிக்க நேர்ந்தது. அதில் பல சுவாரஸ்யமான விஷயங்கள் அருமையாக எழுதப்பட்டு உள்ளன. அவற்றில் அவர் நடிகர் சங்க வரலாறு, கடன் மற்றும் அதன் தலைவராக இருந்த சிவாஜிக்கும் எம்.ஜி.ஆர் க்கும் வந்த கருத்து வேறுபாடு, ஈகோ போன்றவற்றை மிக நேர்த்தியாக எழுதியுள்ளார்.

பல முக்கியமான பிரபலங்களைப் பற்றி அவர் எழுதியுள்ளவற்றில், நமது சூப்பர் ஸ்டார் ரஜினியைப் பற்றி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. அவரது வரிகளின் சாரத்தை இங்கு சமர்ப்பிக்கிறேன்.

"நான் எம்.ஜி.ஆர். , நம்பியார் ஆகிய இருவருக்கும் அவர்கள் எனக்கு ஆரம்ப நாட்களில் செய்த உதவிக்கு நன்றிக்கடன் பட்டு இருக்கிறேன். இன்னும் ஒருவர் இருக்கிறார். அவருக்கு எப்படி நன்றி சொல்ல முடியும் என்றே தோன்றாத அளவுக்கு என்னை அன்புக் கடலில் ஆழ்த்தியிருக்கிறார்.
இந்த திரையுலகில் அடக்கம் நிறைந்த சூது வாது பொய் கபடம் தெரியாத நேர்மை ஒன்றை மட்டுமே கொண்ட எளிமை விரும்பி மனிதர் வாழ முடியுமா என்று என்னை வியக்க வைத்த மனிதர் ஒருவர் உண்டு. அவர் விரலசைவுக்கு தமிழ் நாடே காத்திருக்கிறது . அது யார் என்று உங்களுக்கே தெரியும். ஆம். அவர்தான் ரஜினி".

அவரோடு நான் நடித்த முதல் படம் ஆறு புஷ்பங்கள். அதில் நடித்த போது ஒரு காட்சியில் அவர் ஒரு நூறு ரூபாய் கட்டை எடுத்து என் மீது அடிப்பது போல் வரும். நான் அவரிடம் நோட்டை கட்டாக அடிக்காதீர்கள், பின்னைப் பிரித்து விட்டு அடியுங்கள், காட்சியும் நன்றாக இருக்கும், எனக்கும் வலிக்காது என்று கூறினேன். அவரும் சரி என்றார். ஆனால் காட்சி எடுக்கப்படும் போது இதை மறந்து விட்ட ரஜினி அப்படியே கட்டாக அடிக்க என் முகத்தில் காயம் பட்டு விட்டது. உடனே " நான்தான் அப்பவே சொன்னேனே" என்று சத்தமாக கூறியபடி செல்ல, விஜய குமார் வந்து நான் உண்மையிலேயே சண்டை போடுவதாக நினைத்து என்னை தடுத்தார். ரஜினியும் என்னிடம் வந்து பல முறை மன்னிப்பு கோரினார். நானும் இது போல தவறுவது சகஜம் என்று கூறி விட்டேன்.

பின்னர் அலாவுதீனும் அற்புதவிளக்கும் படத்தில் நாங்கள் நடித்த போது ரஜினி ஒரு பூ ஜாடியை தூக்கி எறிவது போல் ஒரு காட்சி. அப்போது ரஜினி "ஐயா நீங்க கொஞ்சம் தள்ளி நில்லுங்க மேல விழுந்திடப் போகுது" என்றார். நான் பழைய விஷயத்தை எப்பவோ மறந்துட்டேன். நான் சத்தமா பேசினதால நான் கோபப்பட்டதாக நினைக்காதீங்க, என் குரலே அப்படித்தான் என்றேன். ரஜினியும் சிரித்தார். என்னோடு எப்பவும் போல பழகினார். இது எனக்கு ஒரு ஆச்சர்யம். ஏனென்றால் நான் பல பேரை கடிந்து கொண்டிருக்கிறேன். அவர்கள் எல்லாம் இது போன்ற ஓர் விஷயம் நடந்தால் அதையே சாக்காக வைத்து என்னோடு விரோதம் காட்டுவார்கள். ஆனால் ரஜினி இதில் நேர் எதிர். எந்த ஈகோவும் பார்க்க மாட்டார்.

பின்னர் வேலைக்காரன் படத்தில் நடித்த போது அவரிடம் எனக்கு ஒரு படம் பண்ணி தருமாறு கேட்டேன். அவரும் கண்டிப்பாக செய்கிறேன் ஆனால் இப்போ கமிட்மேன்ட் இருக்கு என்றார். நானும் வந்து விட்டேன். பிற்பாடு நான் லட்ச லட்சமாக சம்பாதிச்ச பணத்தை சரியான வழி காட்டுதல் இல்லாததால் இழந்து விட்டேன்.

ஒரு நாள் ரஜினியிடம் இருந்து போன் வந்தது. "ஐயா உங்களிடம் நான் பேசணும் " நானும் அவரை சென்று பார்த்தேன். "ஐயா நீங்கள் படம் பண்ணித் தர கேட்டிங்க. என் உடல் நிலை, மன நிலை காரணமாக நான் பல நாட்கள் இமய மலை போயிடறேன். இப்ப உங்கள மாதிரி இன்னும் சில பேருக்கும் சேர்த்து ஒரு படம் பண்ணி தரலாம்னு இருக்கேன், உங்க அபிப்பிராயம் என்ன" என்று கேட்டார். நான் "பாத்திரம் அறிஞ்சு போடும்பாங்க. நீங்க செய்யறத உதவின்னு சொல்லறத விட தர்மம்னு தான் சொல்வேன்" அப்படின்னு சொல்லிட்டு நன்றியுடன் திரும்பினேன். அந்த படம் தான் அருணாசலம். அதில் எங்களிடம் ஒரு பைசா கூட அவர் பெறவில்லை. மாறாக எங்களுக்கு தயாரிப்பாளர் என்ற பதவியையும் லாபத்தில் ஒரு பங்கையும் பிரித்துக் கொடுத்தார். என் எஞ்சிய காலத்தை நிம்மதியாய் கழிக்க அந்த பணம் பேருதவியாய் இருந்தது. மேலும் நான் அவரிடம் அந்த படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்த போது, "அண்ணே, உங்களை எல்லாம் பார்த்து பிரமித்துதான் நான் நடிக்க வந்தேன், எந்த வேஷம் வேணுமோ எடுத்து நடியுங்க, இதெல்லாம் என்கிட்டே கேக்கணுமா? "என்றார். எனக்கு நல்ல சம்பளமும் தனியாக கொடுத்தார்.

எங்கோ பிறந்து, வளர்ந்து, தமிழ் நாட்டுக்கு கலைச் சேவை செய்ய வந்த அவர் எனக்கு இவ்வளவு செய்ய வேண்டிய அவசியம் என்ன? இதுதான் அன்பு. பல பேர் அவர் புகழுக்காக செய்கிறார் என்று என்னிடமே சொன்ன போது நான் "இப்படி செய்து புகழ் பெற வேண்டிய நிலையில் அவர் இல்லை. அப்படியே இருந்தாலும், யாருக்கு இப்படி மனம் வரும்? என்று காட்டமாக கூறினேன்.

அந்த நல்ல மனிதர் நல்ல ஆரோக்யத்துடன் நீண்ட நாள் வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.


------- நன்றி திரு.வி.கே.இராமசாமி அவர்கள்.